படிச்சோம் .... கிழிச்சோம்
..... பகுதி–05:
நான் பாடம் படிக்காட்ட ஒனக்கென்னவே ???
வருடா வருடம் ஜூன் /ஜூலையில் பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது ரிசல்ட் வந்து
எல்லோரும் அட்மிஷனுக்காக அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருப்பார்கள். நல்ல
ஸ்கூல் , கோச்சிங் நல்லா இருக்கும், நல்ல மார்க் வாங்கனும் பிள்ளை என்று எல்லா
பெற்றோர்களும் கவலைப் பட்டுக் கொண்டிருப்பார்கள். பெற்றோர்கள் என்றாலே பிள்ளை
பிறந்ததிலிருந்து பிள்ளையைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டே தான் இருப்பார்கள். எனவே
அவர்களை விட்டு விடுவோம்.பிள்ளைகளை நாம் கெட்டியாகப் பிடித்துக்கொள்வோம்.
மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ,
அம்மா முத்தம் கொடுப்பது போல செய்தித் தாள்களில் போட்டோ , மற்றும் என்
வெற்றிக்குக் காரணம் எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர் , நான் மருத்துவராகி
மக்களுக்கு சேவை செய்வேன் என்று பேட்டி .
முதல்வர் கையால் பரிசு etc …etc…. . அது என்னவோ தெரியவில்லை யாருமே எனது வெற்றிக்குக் ஒரு காரணம்
எனது சகோதர்கள் (சகோதரிகளும் தான்) என்று கூறுவதே இல்லை. ஒருவேளை , நாம் இருவர் , நமக்கேன் இருவர் என்ற
கொள்கைப் பிடிப்பில் பெற்றோர்கள் அளவோடு பெற்றுக் கொள்வதும் காரணமாக இருக்கலாம். இன்றைய
காலச் சூழ்நிலையில் சகோதர சகோதரிகள் இல்லா நிலையில் வேண்டுமானால் இது சரியாக
இருக்கலாம். இந்த நிலை நீடித்தால் நாளை அத்தை , சித்தப்பா ,தாய் மாமா , மைத்துனர்
என்பதெல்லாம் , சாரிங்க மச்சினிச்சியை விட்டுட்டேன்னு கோவிச்சுக்காதீங்க,
நாளடைவில் எத்தனையோ தமிழ் வார்த்தைகள் போல , வழக்கில் இருந்தே ஒழிந்து விடும்.
முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்
கூட மருத்துவம் படித்தவர்கள் எல்லாம் மருத்துவராகி
மக்களுக்கு சேவை செய்ய தொடங்கி இருந்தால் இந்நேரம் இந்தியாவில் எழுபத்தெட்டு
பெர்சென்ட் நல்ல ஆரோக்யமாக இருப்பார்கள். மருத்துவம் இன்று வியாபாரம் ஆகிப் போய்
விட்டதே.நோய் நாடி நோய் முதல் நாடி என்று வள்ளுவர் சொன்னது போய் நன்கொடையாய் /
மற்றும் ட்யூசன் பீஸ் என்ற பெயரில் கொடுத்த முதலை வட்டியுடன் சேர்ந்து எடுக்கத்
துடிக்கும் ஒரு வணிகமாகி விட்டது மருத்துவம். நாம் நமது கதைக்கு வருவோம்.
எங்கள் தாத்தா திரு.முத்துமேனாட்டுப் பிள்ளை
அவர்களுக்கு மூன்று மனைவிகள் மற்றும் பதினாறு
குழந்தைகள். ஆம். எனது தந்தையின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் பதினாறு பேர். எனது
தந்தையின் சகோதரர்களில் சிலர் அவருடைய பிள்ளை மற்றும் பேரக் குழந்தைகள் காலத்தவர்.
தாத்தா திரு முத்துமேனாட்டுப்பிள்ளை மிகவும் பிரபலமானவர் , எங்கள் சீமையிலே (ஏரியா)
மிகவும் பவர் புல் மேன். அவரைப்பற்றியும் , அவருடைய அனுபவங்களை பற்றியும் மட்டுமே தனியாக
பல பதிவுகள் இடலாம். கண்டிப்பாக அவரைப்பற்றி ஒரு
சில பதிவுகள் இட வேண்டும் எனது பதிவில்.இப்போதல்ல .நேரம் வரும்போது. அவரைபற்றி எழுதாவிட்டால்
‘உப்பாற்றங்கரையோரம் ......... ‘ ஒரு உயிரற்ற வலைப்பூ ஆகி விடும்.
படிச்சோம்......கிழிச்சோமுக்கும்
பாட்டனாருக்கும் என்னடா தொடர்புன்னு கேட்பீர்கள் அல்லவா. எங்கள் ஊர்ப் பகுதியில் 1980 வரைபடித்த அனைவருமே அவர் நிறுவிய R.M.கல்வி நிலையத்தில் படித்தவர்கள் தான். 1957
–ல் R.M.
கல்வி நிலையம் என்று உயர்நிலைப் பள்ளியைத்
தோற்றுவித்து சுமார் ஆறு மைல் சுற்று வட்டாரத்தின் குழந்தைகளுக்கு உயர்கல்வி பெற
வழி வகுத்தவர். அந்தப் பள்ளியைப் பின்னர் அரசுக்கே வழங்கிவிட்டவர்.
இந்தப் பதிவில் வரும் நாமும் , மற்ற ஹீரோக்களும்
அந்தப் பள்ளியில் படித்து வந்தவர்கள் தான்.பள்ளியின் பெயர் பெரிய கோட்டை
உயர்நிலைப் பள்ளி. பெரிய கோட்டை என்றதும் ஏதோ ஆக்ரா கோட்டை போல , செஞ்சிக் கோட்டை
போல நினைத்துவிடாதீர்கள். இது ஒரு சிறிய ஊர். ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்ற ஒரு
பஞ்சாயத்துக் கிராமம். முன்னாள் ராமநாதபுரம் மாவட்டம் , இந்நாள் சிவகங்கை மாவட்டம்
, எந்நாளும் வறட்சியான, பின்தங்கிய மாவட்டம். அதில் உள்ள ஒரு சிற்றூர் தான் இந்த
பெரிய கோட்டை. அந்த ஊரைத்தான் ஆண்டவர்கள் , சரி வேண்டாம் , தம்
கட்டுப்பாட்டுக்குள் சிலகாலங்கள் வைத்திருந்தவர்கள் எனது தாத்தா திரு.முத்துமேனாட்டு
பிள்ளை , அவரது தம்பி திரு.மாயாண்டியா பிள்ளை , பின்னர் எனது தந்தை திரு.சிவசுப்ரமணியம்
அவர்கள். என்ன வாரிசு அரசியலா என்ற கேள்வி கண்டிப்பாக உங்கள் மனங்களில் எழும். தவிர்க்க இயலாததே.
இங்கே ஒன்றை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். என்னடா இவன் முதலிரண்டு பேரையும் பிள்ளை எனப் போட்டு பின்னர் வெறுமனே சிவசுப்ரமணியம் என்று போடுகிறானே என எண்ணலாம்.
இங்கே ஒன்றை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். என்னடா இவன் முதலிரண்டு பேரையும் பிள்ளை எனப் போட்டு பின்னர் வெறுமனே சிவசுப்ரமணியம் என்று போடுகிறானே என எண்ணலாம்.
என் தந்தை திமுக வில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.
அதனால் சாதிப்பெயர் வேண்டாமென மறுத்து , அதன் பின்னர் எங்கள் ஏடுகளில் எல்லாம்
‘பிள்ளை’ இனி இல்லை என்றாகி விட்டது. திமுக வின் அரசியல் பிரவேசத்தால் பெயரில்
வரும் சாதிப் பெயர் எங்கள் வீட்டில் மட்டுமல்ல ,வெகு அளவில் தமிழகத்தில் நீக்கப்பட்டு விட்டது.
கதைச்சது போதும், “நான் பாடம் படிக்காட்ட உனக்கு என்னவே?” க்கு வருவோம். சகோதர , சகோதரிகளுடன் பிறந்த , நன்கு
படித்து , நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு , அவர்களின் இன்றைய நிலைமைக்கு
சகோதரர்களும் கண்டிப்பாக ஒரு காரணம் தான். எனது சொந்த அனுபவங்களில் இருந்து இதனை
விளக்க விரும்புகிறேன்.
எனக்கு முன்னால் பிறந்தவர் மூவர். அடுத்துப்
பிறந்தவர் ஒருவர்.
மூத்த அண்ணா , திரு ராஜேந்திரன், எல்லோருக்கும்
செல்லப்பிள்ளை. படித்தால் என்ன , படிக்காவிட்டால் என்ன பணக்கார வீட்டுப் பிள்ளை
என்கின்ற ஒரு எண்ணம். பம்ப் செட் , நிலங்கள் , அப்பாவின் நிழல் என ஆர்வம் கொண்டு
படிப்பை பள்ளியுடன் நிறுத்திக் கொண்டார்.
இரண்டாவது அண்ணா , பள்ளிக் கல்வி முடித்து
கல்லூரிக்குச் சென்ற பிள்ளை. அவர் கல்லூரியில் சேர்ந்த காலத்தில் எங்கள்
ஊரிலிருந்து கல்லூரிக்குச் சென்றவர்கள் மொத்தமே இரண்டு பேர் தான். முதலாமவர்
எங்கள் மைத்துனர் திரு ஜெயராமன் . இரண்டாமவர் எங்கள் அண்ணன் திரு தனபாலன் . திரு
ஜெயராமன் அவர்களுக்கு இன்னொரு சிறப்பு. அவர்தான் எங்கள் கல்விக்கூடத்தில் படித்து
முதல் முதலாக பட்ட மேற்படிப்பு படித்தவர். ( எனக்கு ரோல் மாடல்களில் இவரும்
ஒருவர்).இரண்டாவது அண்ணா இளங்கலைப் பட்டத்துடன் தமது படிப்பை முடித்துக் கொண்டார்.
இவர் எனது பால்ய பருவத்தில் தினமும் பாடம் படிக்கச் சொல்லிக் கொடுப்பார். அப்படிப்
படிக்காத நாட்களில் அடிப்பார். அப்படி அடி வாங்கும் போதெல்லாம் நான் கூறிய வசனம் தான்
“நான் பாடம் படிக்காட்ட ஒனக்கேன்னவே?”
மூன்றாவது எனது சகோதரி. என் சிறு வயதில் என்னை
பள்ளிக்கு அழைத்துச் சென்றது அவள்.. பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தால் ஒரே சண்டை
தான். ஆனாலும் மறு நாள் பள்ளி செல்லும்போது மறக்காமல் என்னை அழைத்துச் செல்வாள்.
அவள் கொஞ்சம் அடித்தளம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டி வரிசையாக ஆறிலிருந்து எட்டு வரை
ஒவ்வொரு வகுப்பையும் இரண்டாண்டுகள் படிக்க நானும் அவளும் எட்டாம்வகுப்பில் கிளாஸ்
மேட் ஆனோம்.அப்போதும் போட்டி தான். அவள் பொறாமை கொள்கிறாள் எனபதே எனக்கு ஒரு ஊக்க
மருந்தாக இருந்தது. இடை இடையே என் நண்பர்களைப் பற்றிய கம்ப்ளைன்ட். “சங்கரு ,
உருப்படாத பசங்களோடு சேர்ந்து கெட்டுப் போறான்”.இது வீட்டில் மேலும் சிக்கலை
ஏற்படுத்த நமது திறமையைக்காட்டி படிக்க வேண்டி இருந்தது. அவரும் பள்ளியோடு படிப்பைமுடித்துக்கொண்டார்.
வீட்டில் உள்ள அண்ணா, அக்கா, (தங்கை) க்கு
திருமணம் முடிந்ததும் அந்த வீட்டுப் பையனிடம் கேட்கப்படும் முதல் கேள்வி ‘ என்ன ?
மாப்பிள்ளே, லைன் கிளியர் ஆயிருச்சா?’ ஆமாங்க , அவருக்கும் திருமண வாய்ப்பு வந்து
விட்டது. அதே போல தான் நமது கல்வியிலும். சாதாரண ஒரு நடுத்தரக் குடும்பத்தில் ,
அந்தக் காலத்தில் ஒரு பிள்ளையை கல்லூரியில் படிக்க வைப்பதே சிரமம். அதே நேரத்தில் மற்றும் ஒன்றா? மிகவும் மலைப்பாக இருக்கும்.
எனவே , லைன் கிளியர் ஆனாத் தான் படிப்பு.
இல்லாட்டி மண்ணு தான் படிப்பில. எனக்குத் தெரிந்து எங்கள் ஊரிலே இரண்டு பேர்
அப்படிப் பாதிக்கப் பட்டவர்கள். வெளியில் இன்னும் எத்தனையோ பேர் , ‘சம்சாரம் அது
மின்சாரம்’ சந்திரசேகராய் , சகோதரர் கலர் பேன்ட் போட காக்கிப் பேண்ட் போட்டவர்களாக
இருப்பார்கள். இல்லை என்றால் கலப்பையைப் பிடித்தவர்களாக இருப்பர். நாம் சொல்லுகின்ற
இந்த நிலை உயர் படிப்பிற்குத் தான். உயர் நிலைப் பள்ளிப் படிப்புக்கு அல்ல.
அவ்வவ்போது நான் நினைத்துக்கொள்வேன். எனது இரு
மூத்த சகோதரர்களும் மற்றும் சகோதரியும் கல்லூரி வரை படித்திருந்தால் நான் எல்லாம்
கல்லூரி வாசலை மிதித்து இருக்க மாட்டேன் என்பதை. அவர்கள் ஆரம்பத்தில் வழி காட்டி
பின்னர் வழி விட்டு ஒதுங்க என் கல்விப் பயணம் கரை கடந்து ஓடியது. நான் அவர்களுக்கு
நன்றி சொல்லித்தானே ஆக வேண்டும். என்னைப் போல இன்னும் எத்தனை பேரோ ? வாருங்கள் ,
பெற்றோர் , ஆசிரியர்கள் , நண்பர்கள் என நம் உயர்வுக்கு காரணமானவர்களின் பட்டியலில்
நம் உடன் பிறந்த சகோதரர்களையும் இணைத்துக்கொள்வோம். அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.
No comments:
Post a Comment