படிச்சோம் ....... கிழிச்சோம் ..... பகுதி -4
ச்சூளுக்குப் போறேன் .நானும் வாரேன்....
சிறு வயதிலே பொம்ம திரி வெளையாண்டது ஞாபகம் இருக்கா? யாராவது வீடு கட்ட ஆத்து மணல்
லோடு இறக்கிப் போட்டிருந்தா போதும். நமக்கெல்லாம் அது ஒரு பெரிய பம்பர் பரிசு. ஊர்
வாண்டுக எல்லாம் , நாமும் தான் , எல்லாம் அங்கே கூடிடுவோம். அரபியர்கள் , ஒரு
பெரிய தாம்பாளத்தில் குமித்து வைத்திருக்கும் உணவை வட்டமாக அமர்ந்து அவரவருக்கு
எதிரில் உள்ள உணவில் கை வைத்து உண்பது போல நம் வாண்டுகளும் அதை சுற்றி
உக்காந்திருவாங்க.
அதுக்கு முன்னாடி , அரபியர்கள் உணவு உண்ணும் முறையை கொஞ்சம்
விளக்கலாமேன்னு நம்ம ஊரு சலீம் பாய் கேக்குறாரு , அவருக்கு கொஞ்சம் விளக்கிட்டு
அப்புறம் நம்ம மண்ணு திண்ண கதையைச் சொல்வோமா.
அரேபியர்கள் உணவு உண்ணும் முறையே அலாதி தான்.
முக்கியமா யாரையும் பாக்க வச்சுகிட்டு உண்ண மாட்டாங்க. அவுங்களையும் ஆட்டத்தில
சேர்த்துக்குவாங்க. சாப்பாட்டுத் தட்டுக்கு முன்னாடி எல்லோருமே சமம்.வீட்டுப்
பெரியவர்ல இருந்து , தோட்டத்துல வேலை பார்க்கிரவரு வரை எல்லோருமே ஒண்ணா உக்காந்து
சாப்பிடுவாங்க. அதுவும் எப்பிடி? ஒரே தட்டுல.ஆச்சரியமா இருக்குல்ல. ஆனால் அது
உண்மை. வேண்டிய அளவு மட்டும் சாப்பிடுவார்கள். பிரியாணி , கறி அல்லது மீன். கூடவே பச்சைச் செடிகள் , மற்றும் பேரீச்சம்பழம். கறியாக இருந்தாலும் , மீனாக இருந்தாலும் அதை நடுவில் வைத்து சுற்றி சாதம் / பிரியாணி வைத்திருப்பார்கள்... இதுவரை , நீ இந்தியன் , நீ இஸ்லாம் அல்லாதவன் என்று என்னை ஒருமுறை கூட ஒதுக்கியதில்லை. அவர்களோடு நானும் சாப்பிட்டிருக்கிறேன்.
படிச்சோம் கிழிச்சோமுக்கு வருவோம்..
காலையிலே எழுந்ததும் பால் பண்ணைக்குப் போகணும் .
சோமு பெரியப்பா அளந்து ஊத்தும் பால்ல ஒரு 5௦௦ மில்லி வாங்கி வருவோம். அதுலயும்
இளம் பசு பால் வேண்டாம்னு அம்மாவோட அட்வைஸ். ஏன்னு கேட்டா , நல்ல மூடுல இருந்தா , அதுல
காபி போட்டா கெட்டியா இருக்கும்னு பதிலும் , ஏதோ ஒரு எரிச்சல்ல இருந்தா , தொரைக்கு
விளக்கம் சொல்லணுமோ , போயி வாங்கிட்டு வான்னா வாங்கிட்டு வர வேண்டியது தானே ன்னு ஒரே அதட்டலாவும்
இருக்கும். பால் வாங்கிட்டு வந்ததும் கேத்தல்ல, சிக்கரி கலந்த ராம தூதன் காபித்
தூள் அண்ட் வெல்லக்கட்டி போட்டுவச்ச காப்பில பால
கலந்து ஒரு பெரிய தம்ளர்ல விளிம்பு வரைக்கும் ஊத்தி வாங்கிட்டு வருவோம். காப்பிய அமுக்கி
அமுக்கி ஊத்த முடியாது. இல்லாட்டி நல்ல அமுக்கி எப்படியும் ஒரு ரெண்டு டம்ளருக்கு
இல்லாட்டாலும் , ஒன்னரை டம்ளராவது தேத்தி இருக்கலாம்.
காபி குடிக்கிறவரைக்கும் தான் வீட்டுல. அது முடிஞ்சிச்சா
, அத்து விட்டுச்சாம் கழுதை எடுத்து விட்டுச்சாம் ஓட்டம்னு வயற்காடு அல்லது உப்பாற்றுக் கரையோரம். சுமார் 7:30 க்கு ஊரணிக் கரை. கோலிக்குண்டு
வெளையாட்டு . இல்லாட்டி இடைக்காட்டூர் டென்ட் கொட்டாயில பார்த்த எம்ஜிஆர் சினிமாவை
பத்தின ஒரு அலசல்.அப்புறம் சட்டை டவுசர் எல்லாம் அவுத்து கரையில போட்டுட்டு ஊருணிக்குள்ள
ஒரே கும்மாளம் தான். வாடா மச்சான் வாடா ன்னு தண்ணிக்குள்ள பாட்டு வேற. காலேஜ்
படிக்கிற அண்ணன்லாம் பிரஷ்ல பேஸ்ட் வச்சு பல்லுத் தேய்ப்பாங்க. மத்தவங்க எல்லாம்
சாம்பல் , இல்லாட்டி செங்கல் போடி தான். சோப்பு?? அது இல்லாமலா? என் அழகுமேனியின்
ரகசியம் லக்ஸ் சோப்புன்னு எதாவது ஒரு பிரபலமான நடிகை குமுதம் / ஆனந்த விகடன்ல சொல்லியிருப்பாங்க. நமக்கும்
கொஞ்சம் அழகு வந்துடாதான்னு ஒரு நப்பாசைல அதையும் வாங்கிட்டு வந்து கரைக்கிறது
தான்.
(அழகு வந்துச்சா , வந்துச்சான்னு சோதிக்க
வேண்டாம் மோளே. இருக்குன்ன அழகு அங்கன தன்னே உண்டு.கூடிட்டும் இல்லா .
கொரைஞ்சிட்டும் இல்லா)
குளிக்கும் போது அடிக்கும் லூட்டி இருக்கே ...
யப்பா தாங்காது. ஒண்ணா ரெண்டா ? நம்ம
போடுற ஆட்டத்தைப் பார்த்திட்டு கரையல போர பெரிசு கோபத்துல கரையில் உள்ள நம்ம டிரெஸ்ஸை எல்லாம் எடுத்து மடப்பள்ளியின்
மீது போட்டுவிடும். அது அதன் அதிகாரத்தை காட்டுதாம். நம்ம செட்டுலே உயரமா , மரம்
ஏறத் தெரிஞ்சா ஒருத்தனைக் கெஞ்சிக் கூத்தாடி , பள்ளிக்கொடத்துல
ஒன்னுக்குத்தண்ணி விடய்ல கல்கோனா
வாங்கித்தர்றேன்னு பிராமிஸ் பண்ணி எப்பிடியோ அவனை மடப்பள்ளியின் மீது ஏற்றி விட்டு டிரெஸ்ஸை வாங்கிப் போட்டுக்கிட்டு ,
பிள்ளையாருக்கு ஒரு கும்பிடு போடுவோம். ,அப்புறம்
சிவன் கோவில ஒரு சுத்து வளம் வருவோம். வழில இருக்கிற கணபதி நாட்டியமாடிக்கிட்டு இருக்குற பிள்ளையாரைப் சிலையைப் பார்த்து ‘ இது நடன கணபதி ‘ ‘இல்லேடா நர்த்தன கணபதி ‘
ன்னு ஒரு விவாதம் , அப்புறம் சன்டிகேசவரருக்கு முன்னாடி நின்று ‘டேய் இந்தச்
சாமிக்கு காது கேக்காதாம்டா ‘ ன்னு சொல்லி
கைத்தட்டி சாமியக் கும்பிட்டு நவக்கிரகங்களை ஒரு சுத்து சுத்தி நேர வீட்டுக்குத்தான்.
வீட்டுல அம்மா தோசை கல்லைப் போட்டு தோசை சுட
ஆரம்பிப்பாங்க, மூணு வெள்ளத் தோசை , மூணு கேப்பத் தோசை., தொட்டுக் கொள்ள மிளகாய்
சட்னி ... முடிந்தது காலை உணவு.
கொடியில கெடக்குற முந்தாநேத்து கழட்டிபோட்ட
டவுசரு , சட்டைய போட்டுகிட்டு நம்ம ஸ்டோர் ரூம், அதாங்க எதாவது சன்னல் திண்டு , அங்கே
தானே புத்தகமெல்லாம் அடுக்கி வச்சிருப்போம் , அதுல அன்னைக்கு வேண்டிய நோட்டு ,
புஸ்தகம் எடுத்துக்கிட்டு , ஹவாய் செருப்ப
போட்டாச்சுன்னா , பட்டயக் கெளப்ப
போறேன்னு இல்லே ..இல்லே . ஸ்கூலுக்கு
கெளம்பிட்டேன்னு அர்த்தம். அம்மா போயிட்டு வர்ரேன் .. அம்மா போயிட்டு வர்ரேன் ன்னு
சொல்லிட்டு நடராஜா பஸ் சர்வீசுல பயணப்பட வேண்டியது தான். வழி நெடுக டேய்
மனோகரா வாடா , ஞானம் வாடா , டேய் முருகேசா வாடா ,
ஜெகன்னாதா வாடா ன்னு கூப்பிட்டுகிட்டே போக நம்ம சேனையும் பெருகிவிடும்.
முதல் மண்டகப்படி , சக்கரைப்புளி மரத்துக்கிட்ட.
அப்புறம் பள்ளிக்கூடத்துக்கு அருகிலே உள்ள கோயில் மண்டபத்தில ,
தோப்புல . தோப்பு இல்லாட்டி வேலிக்கருவைக் காட்டுக்குள்ளே. கொஞ்சம் இளைப்பாறல்.
முதல் மணி அடிக்க வகுப்பறையில் தரையில் அமர்வோம். இரண்டாம் மணி அடிக்கும் வரை சல
... புல... சல புல. பிரேயர். அப்புறம் வழக்கம் போல அன்னைக்கில இருந்து இன்னைக்கு
வரைக்கும் என்ன நடத்திகிட்டு இருக்காங்களோ அதே பாடங்கள். . தமிழ் னா , முயல் ஆமைக்
கதை , காண மயிலாடக் கண்டிருந்த வான் கோழி... கற்றதனாலாய பயனென்கொல்.... ஆங்கிலத்துல , மிடாஸ் டச் , பெலன்குயின் பேரர்ஸ்
, கீதாஞ்சலி , அப்புறம் வரலாறுல அகபர் தீன் இலாஹி மதத்தை தோற்றுவித்தார் , அசோகர்
குளத்தை வெட்டினார் ... .எப்படா ஒன்னுக்குத் தண்ணி விடுவாங்கன்னு ஒரே ஆவலா இருக்கும்.
மணி அடிச்சதும் வெளிய ஓடிப்போயி திறந்த வெளியில்
ஈரமாக்கிவிட்டு, ஐஸ் வண்டிக்கரரிடம் அஞ்சு
பைசாவுக்கு ஐஸ். மற்றும் பொட்டி கூட இல்லாத பாட்டியின் பொட்டிக்கடைல மூணு பைசாவுக்கு
கல்கோனா.
“ டேய் சங்கரு...... எனக்குடா “
“சத்தியமா காசு இல்லேடா “
“சரி... ஒண்ணு வாங்கு .. காக்கா கடி கடிச்சுவோம்.
மதிய இடைவேளை என்பது ஒருமணி நேரம்.உள்ளூர்
மாணவர்கள் அவரவர் வீட்டுக்குச் செல்ல வெளியூர் மாணவர்கள் பள்ளியிலே உணவை முடித்து
விட்டு பள்ளியின் வாசலிலும் , கோவில் மண்டபத்திலும் மற்றும் மரங்களின் நிழலிலும்
இளைப்பாறுவர். இடையில் ஐஸ் வண்டிக்காரரிடம் அக்கௌன்ட் வைத்து ஐஸ் சாப்பிடுவார்கள்.பாட்டி
கடையில் கடலை மிட்டாய் , கொக்கோ மிட்டாய் ,முறுக்கு. இது தவிர சீசனுக்கு ஏற்றார்
போல, கொடுக்காபுளி , மாதுளம் பழம் , பனங்கிழங்கு , அவித்த கடலை etc. ..பாட்டி கடையின் வியாபார நேரமும் பகல் ஒரு மணிக்கு தான்
மற்றும் அந்த ஒரு மணி நேரம் தான். அந்த இளம் வயதில் ‘ பாட்டி அநியாயமாய்க் கொள்ளை
அடிக்குதுடா ‘ என்று எத்தனை வாட்டி கமென்ட் அடித்திருப்போம். அதனை இப்போது
நினைத்தால் மனது வலிக்கிறது. பாட்டி செய்தது
வியாபாரம் மட்டும் அல்ல. ஒரு சேவை. அதனைக்காட்டிலும் தன்மானமிக்க உழைப்பு.
இன்னும் சொல்லப் போனால் அவருக்கு அதுவே அந்த தள்ளாத வயதிலும் தள்ளி விட முடியாத
பிழைப்பு. அவருக்கு என் பணிவான வணக்கமும் நன்றிகளும்.
பள்ளிப் பருவம் ... இன்று நினைத்தாலும்
விழிகளில் வெள்ளம். எத்தனை நிகழ்வுகள். சண்டை , சமாதானம் , கேலிப் பெயர்கள் ,
கிண்டல்கள், ஆசிரியரிடம் குறும்புகள் ,
மாணவிகளிடம் பேசும்போது வரும் மின் அதிர்வு., ஏப்ரல் முதல் தேதியில் இங்க்
தெளிப்பது , AF என்று ரப்பரில் ஸ்டாம்ப் செய்து
அடிப்பது .. எழுதலாம் ..எழுதலாம் .
இன்னும் எவ்வளவோ எழுதலாம். கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விடுவோம்.
இவையெல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு
இல்லையே என்று ஒரு ஏக்கம் நம் மனதில் . இந்த ஏக்கம் ஏதோ எம் தலை முறைக்கு
மட்டும் என்றில்லை. வீசம் , முக்காலே மூணு வீசம், முந்திரி , மாகாணி என்று குருகுலத்தில் படித்த தாத்தாக்களும் , வெள்ளி முளைக்கப பள்ளிக்குச் செல்வோம்’ என்று
டவுசர் , சட்டை போட்டுச் சென்ற அப்பாமார்களும் ஏங்கிய ஏக்கம் தான். . நாம் கிட்டி, கோலி , பம்பரம் என வரிசைப்படுத்தினால் , நமக்கு அடுத்த தலைமுறை கிரிக்கெட்டில் தொடங்கி , சூப்பர் மரியோ , ஜெயந்த் வில் , ரோல்லர் கோஸ்டர் என்பார்கள். அதற்கு அடுத்த தலைமுறை ,செல்லிடப் பேசியிலே விளையாட்டு. ஒவ்வொரு தலை முறையுமே சொல்லும் 'நாங்க அனுபவிச்சத நீங்க அனுபவிக்கலே" எங்கள் தலைமுறை அனுபவமே வேறு. நாளை எம் பிள்ளைகளும் இதையே தான் சொல்லுவாரோ
No comments:
Post a Comment