Tuesday, 17 May 2016

படிச்சோம் ... கிழிச்சோம் .. -7 ஓரம் போ ..ஓரம்போ சங்கரு வண்டி வருது.


படிச்சோம் ... கிழிச்சோம் ..  -7  

 

ஓரம் போ.... ஓரம் போ..... சங்கரு வண்டி வருது.

 

“என்ன டா  சங்கரு , வரும் போதே இளைய ராஜா பாட்டுல உன் பேரை சேர்த்துக்கிட்டு வர்றே.... கவிஞர் கண்ணதாசன்னு நினைப்போ?”

“நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் நான் கவிஞன் தானுங்க. ஆனா கண்ணதாசன் , வாலின்னு  காவியம் படைத்தவர்கள் ரேஞ்சுக்கு எல்லாம் இல்லீங்கோ. ஏதோ அவுங்க கால் தூசி அளவு எழுதினாலும் கவிஞன் தானுங்கோ. அப்பிடி என்ன எழுதினோம் கேக்குறீங்களா?”

“டேய் , நான் ஒண்ணும் அப்பிடி எல்லாம் கேக்கலையேடா! “

“ இல்லைங்க , நீங்க வாயைத் தொறந்து கேக்காட்டாலும் ஒங்க மனசு கேக்குறது நமக்கு தெரியுதுங்க. எடுத்து விடட்டா?”

“ என்ன செய்யுறது ? என் நேரம்... நல்லா வந்து மாட்டிகிட்டேன்...காலைச் சுத்துன பாம்பு.... கடிக்காம விடுமா? சரி..சரி  சொல்லு .”

“முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து.

நான் மாடக் கூடல் தன்னில்

நற்றமிழ் புலவோரின்

ஆய்ந்த காப்பியங்களில்

அக மகிழ்ந்து கிடந்தவளே...

தாயே ... தமிழே

தலை பணிந்து வணங்குகிறேன். “

 

“அடுத்து என்ன? கவிஞன்னு சொன்னா, ஒண்ணு காதல் தோல்வி இல்லாட்டி கம்யூனிசம் கொள்கைக் காரன்னு இருக்கும். நீ எந்த ரகம்?””

“அப்பிடி எல்லாம் இல்லீங்கோ... ஆனா எல்லாமும் இருக்கும்ங்க. காதல் தோல்வின்னு புலம்புனவன்லாம் சந்தோஷமா புள்ளை குட்டிகளோட இருப்பான். கம்யூனிசம் பேசுனவன்லாம்  , காசு வருதேன்னு அமெரிக்கா , அயல் நாடுன்னு ஓடிப் போய் சொகுசா வாழறான்...

 

இங்கே மாத்திரம் என்ன வாழுதாம்? இந்தியால படிச்சுப்புட்டு துபாய்ல சம்பாரிக்கிறது சரியா?

அதான் சொன்னேன்ல....  திமுக ஆட்சிக்கு வந்தா திமுக கரை வேஷ்டிய கட்டிக்கிட்டும் , அதிமுக ஆட்சிக்கு வந்தா அதிமுக கரை வேஷ்டிய கட்டிக்கிட்டும் மார்கெட்ல மாமூல் வாங்கிற அரசியல் அல்லக்கைகள்  மாதிரி , பொழப்புன்னு ஒன்னைப் பார்க்கனும்ல.....

 

அப்படீன்னா கொள்கை, லட்சியம்னு எதுவும் இல்லையா? திமுக காரன்னு சொல்லிக்கிட்டு சண்டைக்குப் போறது எல்லாம் வேஷமா?

இல்லைங்க... அப்படி இல்லே. திமுக காரன்னு சொல்றது வேஷமில்லை. அது உணர்வு. அது வேறு..அதைப் பத்தி சொல்லனும்னா தனிய ஒரு பதிவே போடுவோம்..சரியா? ..இப்போ நம்ம கவிதைக்கு வருவோம்.

 

 

 

 

கவிஞன்னாலே நேரத்துக்கு ஏத்த மாதிரி வேஷம் போட்டுக்குவோம்... .

 

காதல் தோல்வின்னு ஒரு கற்பனைல........

காதல் பறவைகளாய் மாறி

கனவுச் சோலைக்குள் புகுந்து

உறவுக்கீதங்கள் இசைத்து

உலகை மறந்திருந்த

ஆனந்தப் பொழுதுகளில் .....

சாதி எனும் அரக்கன் சாட்டை சொடுக்கிவிட

எழுந்த தீப்பிழம்பில்

எங்கே சென்றாய் என் நிலவே?

 

தவிப்பு என்னும் தலைப்பில் ............... .

வெளியே.................

இருட்பனி.

மூக்குத்திப் பூக்களாய்

மின்மினிப் பூச்சிகள்.

காற்றில் தவழ்ந்தே கானம் இசைத்திட

உள்ளே ...

குழல் விளக்கின்

ஒளி மழையில்

எண்ணக் குதிரையின் கடிவாளத்தை

இழுத்திபிடித்திட இயலாது

அப்பப்பா என்ன தவிப்பு....

 

காதல் மொழி பேசிய விழிகளுக்காக ...............

 

ஓர விழிப் பார்வையினால்

நீ உணர்த்தும் காதல்

நூறு மொழி சொல்லா

நுண் கவிதை யன்றோ....

 

மார்கழி மாதப் பஜனைக் குழுவிற்காக .................

 

தொந்திக் கணபதிக்கும் ஜே ஜே.

அவர் தோப்பனாரு பரமனுக்கும் ஜே ஜே..

மதுரை அழகருக்கும் ஜே... ஜே,,

அவர் மருமகனாம் முருகனுக்கும் ஜே..ஜே..

வில்லொடிச்ச ராமனுக்கும் ஜே ஜே

வெற்றி சேதி சொன்ன ஹனுமனுக்கும் ஜே ஜே.

 

 

கலவியைப் பற்றி

கத்தியின்றி ரத்தமின்றி களமென்று ஏதுமின்றி

யுத்தம் ஒன்று நடக்குதடி யுகம் பல ஓடுதடி

தீண்டாய் என்றே உதடிசைக்க தீண்டிடவே அவயம் துடிக்க

காய்ந்த சருகு வழி தேடி கனலொன்றில்  வீழ்ந்தற்றே

காளையும் கண்ணியம் காமத்தில்  கருகி உருகுதடி. 

கை விரலிட்ட காயங்களோ  கானங்கள் எழுப்புதடி

களைப்புற்றே கலவியிலே களித்திருக்கும் நேரமடி

வீழ்ந்தார் எவருமில்லை என்றே இருவரும்

வெற்றிக் களிப்பில் மயங்கும் நேரமடி.

 

சரி டா .. சங்கரு .. பரவா  இல்லே ...ஆமா ஒனக்கு சினிமாப் பாட்டெழுத வருமா?

ஏன் சார்? உங்களுக்கு யாரவுது மியூசிக் டைரக்டரைத் தெரியுமா? எப்பிடியாவது ஒரு சான்ஸ் வாங்கிக் கொடுங்க சார். பின்னிப் பெடல் எடுத்திருவோம். கேக்குறீங்களா ?

 முதல்ல ஏதாவது பாட்டு ஒன்னு சொல்லேன்..

அந்தக் காலப் பாட்டா ? இந்தக் காலப் பாட்டா?

அதுலே ஏன்டா ஓரவஞ்சனை? அந்தக் காலத்துக்கு ஒன்னு , இந்தக் காலத்துக்கு ஒன்னு சொல்லு.

.நல்லா கேட்டுக்கோங்க , எம்எஸ்வி ட்யூன்ல எம்ஜிஆர் படத்துல வர்ற டூயட்.

 

வள்ளலே வள்ளலே  வணங்குகிறேன்

வாடிய பயிர் போல் சுனங்குகிறேன்

அள்ளியே  நீ என்னைக் கொஞ்சிடவே

அழைக்கிறேன் அழைக்கிறேன்  .வந்திடுவே.

 

மென்மையே மென்மையே பூங்கொடியே

மேதினியில் உன் போல  யாரும் உண்டோ

என்னவள்  உன்னைத்தான் இழுத்தணைக்க

ஏங்கிடுதே  என் மனம் ஏங்கிடுதே....

 

ஆரம்பம் நல்லாத் தான் இருக்கு .. ..இந்தக் காலத்துக்கு ?.....

 

இந்தக் காலத்துக்கா ... சரி  அனிருத் இசையில போடுற பாட்டு மாதிரி

கொடுப்போமா ?

ரோடு மேல போறியேடி  ரோஷக்காரி

ரோமாபுரி வேலை காட்டும் வேஷக்காரி

கொழுப்பெடுத்த  கருப்பான குறும்புக்காரா

நீ கொடுப்பதென்ன இனிக்கின்ற கரும்புச் சாரா?

டிங்கி டக்கா டிங்கி டக்கா டிங்கி டக்கா தான்.

தினமும் என்னைத் தேடி நீயும் வந்திடத்தான்

 

டேய் இரு.. இரு.. இதுக்கு என்னடா அர்த்தம்?

அது தான் இந்தக் காலத்துக்குன்னு சொல்லிட்டேன்ல. அப்புறம் போயி அர்த்தமெல்லாம் கேக்குறீங்களே நியாயமா ?

உங்க கிட்டே பாடல் பாடிக்காட்டினா  ஒன்னும்  தேறாதுன்னு நல்லாத் தெரியுது .. .. நான் கெளம்புறேன். எங்க சார் ஆளைக் காணோம்? சார்...சார்...

படிச்சோம் ... கிழிச்சோம் - 8 .. தெக்கூர் பையன் தூள் கிளப்புறான்டா


படிச்சோம் கிழிச்சோம் – 8

தெக்கூர் பையன் தூள் கிளப்புறான்டா

சிவகங்கைக்கு மாவட்டத்தில் இருக்குற கல்லூரணி தான்  எங்க அம்மா காந்திமதி பிறந்த ஊரு. கானூர் கண்மாய் பாசனத்தில் கரும்பு நன்கு விளைந்து செழிப்பாக இருந்த ஊர். அங்கே எனது அம்மா வழிப் பாட்டனார்   திரு.வ.தங்கச்சாமியாபிள்ளை  அவர்கள் தான் கிராமஅதிகாரி. (Head man).  மலேசியாவில் வேலை பார்த்து நல்லா விபரம் தெரிஞ்சவரு. நாலும் அறிஞ்ச வரு. அந்தக் காலத்திலே ‘ரோலக்ஸ்” வாட்ச் வைச்சிருந்தவரு. அவர் முதுமையில் வாதம் வந்து நோய்வாய்ப் பட்டிருந்தார். அப்போ எனக்கு பத்து வயசிருக்கும் . அவரு பெயருக்கு வந்திருந்த ஒரு திருமணப் பத்திரிக்கையை  வாசிக்கும் போது அவர் பெயரை வதங்கச்சாமி  என்று வாய் விட்டுப் படிச்சேன்.அதைகேட்டு அங்கே இருந்த அனைவரும் கண்ணில் நீர் தேக்கினர்.

அந்த தாத்தா  ஒருமுறை எங்கள் தந்தைக்குக் கூறிய அறிவுரை ... “தேடி வைக்காததை கூறி விற்காதே” அது என் நெஞ்சில் ஆழப் பதிந்து விட்டது.  அதனால் எங்கள் பூர்வீகச் சொத்துக்களை ஒரு கட்டாயத்தின் பேரில் தந்தை விற்ற போதேல்லாம் என் நெஞ்சம் கனக்கும். ஆனால் நாம் சிறுவனாக இருந்ததாலும் , தந்தைக்கென்று விவசாயத்தைத் தவிர வேறு வருமானம் இல்லாததாலும் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. எனது தந்தை சொத்துக்களை விற்றாலும் பிள்ளைகளை நல்லவிதமாக வளர்த்திருக்கிறார்.

எனது அம்மாவுடன் பிறந்தவர்கள் நான்கு பேர் . திலகவதி சின்னம்மா ,கமலா சின்னம்மா , ஜெயா சின்னம்மா மற்றும் சத்திய மூர்த்தி மாமா ஆகியோர். கமலா சின்னம்மா அவர்கள்  கல்லூரணி நடு நிலைப் பள்ளியில் ஆசிரியை.

சின்ன வயசுல இருந்தே  பெரும்பாலும் கோடை விடுமுறைக்கு கல்லூரணி கிளம்பிறுவேன். ஒரு மாசம் முழுசும் அங்கே தான். தாத்தா, சின்னம்மாக்கள், மாமா அனைவருமே பாசமாக இருப்பார்கள். அம்மாச்சி இல்லை. நான் எனது அம்மாச்சியையும் , அப்பத்தாவையும் பார்த்தே இல்லை. இருவருமே நான் பிறக்கும் முன்பே இறந்துவிட்டார்கள்.

மிகச் சிறிய வயசுல நான் சரியான நை... நை..  ..அழுமூஞ்சி எல்லாம் இல்லிங்க. சும்மா லொட , லொட கேஸ்.. தொன தொன வென எதாவது கேள்விகள் கேட்டுக்கிட்டே இருப்பேன்.

அப்படி மிகச்சின்ன வயசுல நடந்தது இப்போ ஞாபகம் வருது. ஆமாங்க .. ஆட்டோகிராப்பே தான். அப்ப எனக்கு  அஞ்சு  இல்லாட்டி  ஆறு வயசிருக்கும் , அந்த வயசுல ஒரு தடவை கல்லூரணி போயிருந்தப்ப   வீட்டில என் தொல்லை தாங்கலைன்னு  , சின்னம்மா அவர்கள் என்னையும் அவர்களுடன் பள்ளிக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க .நல்ல வேளை .இப்ப  இருக்கிற மாதிரி  பள்ளிகள் அப்ப இல்ல. அந்தப் பள்ளியில் பயிலாத குழந்தை பள்ளிக்கு வருவதற்கு எவ்வித தடையும் இல்லை.எனவே நானும் அந்தச் சின்னஞ் சிறுசுகளுடன் தரையில் அடக்கமாக அமர்ந்திருந்தேன்.ஆம். அப்போதெல்லாம் வகுப்பறையில் பெஞ்ச் கிடையாது. சின்னம்மா படம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு சிறுமியை அழைத்து  ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு ‘ சொல்லு எனக் கூறினார். அந்தச் சிறுமி திரு திரு என விழித்தார். வேற யாரவது சொல்லுங்க என்று டீச்சர் சொன்னாங்க. ஒன்னு சொல்ல மறந்துட்டேன். எங்க பெரியகோட்டை பள்ளியிலே , லீலாவதி டீச்சர் , தவமணித் தாய் சாமுவேல் டீச்சர் , குழந்தை தெரசா டீச்சர் மற்றும் அமலதாஸ் அசிரியர் அனைவரும் எனக்கு வைத்திருந்த பட்டப் பெயர் ‘முந்திரிக் கொட்டை’ . பழக்கம் போகுமா என்ன ? நான் படக்குன்னு எழுந்து சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.

 

“தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு

துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்றது வெள்ளை பசு உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

நாவால் நக்குது வெள்ளை பசு

பாலை நன்றாய் குடிக்குது கன்றுக் குட்டி

முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு மடி

முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி.”

எல்லா மாணவர்களுக்கும் ஆச்சரியம். டீச்சர் எல்லோரையும் கை தட்டச் சொன்னாங்க. குஷியா எல்லாப் பிள்ளைகளும் கை தட்டினாங்க.  இந்தக் கை தட்டல் இருக்கே அது ஒரு போதை மாதிரி . ஒரு தடவையாவது வாங்கிரணும்னு எல்லோருமே ஏக்கப்படுவோம். ஒரு முறை வாங்கிட்டா இன்னும் வாங்கனும்னு ஓர் ஆர்வம் வந்திரும். டீச்சர் சின்னம்மா வேற என்ன தெரியும்னு கேட்டாங்க.

சான்ஸ் கிடைச்சுதா சங்கரா ... அடிச்சுத் தூள் பண்ணுன்னு அப்பவே மனசு ஆர்டர் போட வரிசையாய் வந்து விழுந்தன...

அறஞ்செய விரும்பு...ஆறுவது சினம் .என்று ஆத்தி சூடியையும்

கற்கை நன்றே கற்கை நன்றே .. பிச்சை புகினும் கற்கை நன்றே.. என்று கொன்றை வேந்தனும்

‘ ஊசி மூஞ்சி மூடா எனக்குக் கூடு கட்டத் தெரியாது அதைப் பிரித்து எரியத் தெரியும் ‘ என் குருவியைத் திட்டிய குரங்கின் கதையையும் அச்சு மாறாம பிச்சு எடுத்து விட்டுட்டோம்ல. .

கை தட்டல் மேலே கை தட்டல். பக்கத்தில இருந்த கிளாஸ் பசங்க எல்லாம் வந்துட்டாங்க.. ஒரே ஆச்சரியம் .

அவுங்க அடிச்ச கமென்ட் என்ன தெரியுமா ?

‘தெக்கூர் பய தூள் கிளப்புறான்டா’

Saturday, 15 March 2014

சக்கரைப் புளி..... , பச்சரிசி மாங்காய்...... ,


சக்கரைப் புளி..... , பச்சரிசி மாங்காய்...... ,

 

இது என் வாழ்வில் என்னுடன் ஐக்கியமான இரு ஜீவன்களைப் பற்றியது. எங்கள் கிராமத்தில் இருந்த இரண்டு அஃறினை உயிர்கள்.ஒன்று சிவன் கோயில் மா மரம். மற்றொன்று  சக்கரைப் புளியமரம். ஆமா , மரங்களுக்கு ஜீவன் உண்டா? மரம் நட்டு , வளர்த்துப் பாருங்கள். உங்களுக்கே தெரியும்..

சக்கரைப்புளி..... இது எங்கள் ஊர் எல்லையில் ரோட்டின் மேலே பறவைகளுக்கெல்லாம் சரணாலயமாக இருக்கிறது.  மரத்தின் கிளைகள் நான்கு பக்கமும் சிதறி நல்ல நிழல் தருகின்றது. அந்த நிழலில் , பெரியகோட்டையிலிருந்து தலையினில் சுமை தாங்கி வருபவர் மற்றும் வெயிலுக்காக தலையில் துண்டை , துணியை போட்டுக் கொண்டு வருபவர்கள் தங்கி இளைப்பாறும் ‘பயணியர் விடுதியும்’ இது தான். என் தந்தையின் தலைமுறையில் இருந்து இன்று வரை  மூன்று தலைமுறையினரின்  கல்லடிகளை , பெற்ற அன்னையாய் ஏற்றுக்கொண்டு   சிரித்தமுகத்துடன் இன்றும் தாங்கி நிற்பது அதுவே.

அப்படி என்ன சிறப்பு  அந்த மரத்திற்கு? .. இந்த மரத்தின் பழங்கள் மிகவும் தித்திப்பாக இருக்கும். புளியம்பழம் இனிப்பா இருக்குமா? சங்கர் போங்கு.... டூப் மச் டர் னு நீங்க நினைப்பீங்க. ஆனா அத்தனையும் நிஜமுங்க.அதனால் தான் அந்த மரத்திற்குப் பெயர் சர்க்கரைப் புளி.  இந்த மரத்தின் புளியம்பழம் எங்கள் பள்ளியில் ஒரு தின் பண்டம். எங்கள் ஊர் வழியாகச் செல்லும் அனைத்து மாணவர்களும் அன்போடு ஓரிரண்டு கற்கள் வீசி , சக்கரைப்புளி கருணையாய் தருவதை மகிழ்வாக ஏற்றுக் கொண்டு செல்வர். பள்ளியிலே அந்த மாணாக்கருக்கு ஒரு தனி அந்தஸ்து தான். அதன் சுவை தனி. அது தான் அந்த மரத்துக்கு சொந்தக்காரர்களை வாய் திறக்காமல் கட்டிபோட்டது. அந்த மரத்துக்கு சொந்தக்காரர்கள்  வேறு யாருமல்ல எங்கள் குடும்பம் தான்.

எனக்கு முன்பாக பள்ளிக்கு கிளம்பிய மாணவர்கள் கல்லெறிந்து கொண்டிருக்கும் போது, பள்ளி செல்லும் வழியில்  நானும் அவர்களில் ஒருவனாகி விடுவேன். அந்த நேரத்தில் என் தந்தை அங்கு வந்தால் ?

என்ன , அவரு ஒங்களையெல்லாம் அடிச்சு வெரட்டுவாரா ?

இல்லை..இல்லை.  எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து அவர் மிகவும் நல்லவர். இது போன்ற மற்றவர்க்கு துன்பம் தரும் வேலைகளில் ஈடுபட மாட்டார். மாறாக தனது உடன் வரும் நண்பர்களை  , நம்மை விட வயதில் பெரியவர்களை , கல்லெறியச்  செய்து வீழ்கின்ற பழங்களை மாணவர்களுக்குக் கொடுத்து மகிழ்வார்.

எங்கள் வீட்டின் எழுதாத ஒரே கண்டிஷன். பொது மக்களோ மாணவர்களோ யாரும் மரத்தின் மீது ஏறி உலுப்பிக் கொள்ளக் கூடாது. நாங்கள் தான் அதைச் செய்ய வேண்டும்.

அந்த மரத்தின் நிழலில் கோலி விளையாண்டிருக்கிறோம். மரத்தின் மீது பழமில்லா நேரங்களில் ‘மரமேறி விளையாட்டு விளையாண்டிருக்கிறோம். மரத்தின் கிளையில் கயறு கட்டி ஊஞ்சலாடி இருக்கிறோம். இந்த மரத்தின் அடி பாகம் இரண்டாகப் பிரிந்து ப’ வடிவத்தில் அமைந்திருக்கும். அதன் நடுவே துண்டை விரித்துப் படுக்கும் பொழுது அம்மா மடி மீது படுத்து உறங்கும் ஒரு உணர்வு பிறக்கும்..

அந்த மரத்தின் மற்றும் ஒரு  சிறப்பு , எனக்குத் தெரிந்தவரை எல்லா புளிய மரமுமே இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தான் பூக்கும் , காய்க்கும். ஆனால் இந்த மரம் வருடம் தவறாமல் பூத்து காய்த்து விடும். இன்றும் வருடத்திற்கு ஒரு முறை அந்த மரத்தில் பறித்தது என எங்கள் பங்கும் எனது மூத்த சகோதரரிடம் இருந்து வந்து விடும்.

இது போன்றே இன்னொரு மரம் . மாமரம். இது எங்களுக்குச் சொந்தமானதல்ல. சிவன் கோயிலுக்குச் சொந்தமானது. சிவன் சொத்து குல நாசம்னு சொல்லுவாங்க. . என் வாழ் நாளில் இந்த மரத்தில் பழம் கண்டதில்லை. காய்களை பழுக்க விட்டால் தானே பழமாகும். காய்களே அப்படி ஒரு ருசி, நல்ல இனிப்பாக இருக்கும். பற்களில் கூச்சம் ஏற்படுத்துவதில்லை.

பல் கூச்சத்தை எப்படி ஆங்கிலத்தில் கூறுவது எனஒரு முறை விவாதமே நடந்தது. கூச்சப்படும் அத்தை மகளை வெட்கப்படுகிறாள் எனத் தானே சொல்வோம். அது போலவே , டீத் ஆர் ஷையிங்னு சொல்லலாமா? டூத் ஏக் என்றே கூறுவோம்.மிக சமீபத்தில் தான் ஆங்கிலத்தில் அதனை சென்சிடிவிடி    எனக் கூற வேண்டும் எனத் தெரிந்து கொண்டேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அந்த மரத்தில் கல் எறிந்திருக்கிறேன். கை நிறைய மாங்காய் எடுத்து வந்திருக்கிறேன்.  குளத்தில் குளிக்கப் போகும் பொழுது , விடுமுறை நாட்களில் சீட்டாட்டம் ஆடுவதற்கு எங்கள் கிளப்(?!)பிற்கு போகும் போது , மற்றும் வீட்டுக்குத் தெரியாமல் , மறைவாக திருட்டுத் தம் அடிக்கப் போகும் பொழுது  என சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மான் வேட்டை , அல்ல , மாங்காய் வேட்டைதான். யாருமே எதிர்ப்பு செய்வதில்லையா என்ற வினா உங்களுக்குத் தோன்றலாம்.

எதிர்ப்பு இல்லாமலா? சிவன் கோவிலை நிர்வகித்து வந்த அய்யரப்பா குடும்பம் தான் அதற்கு உரிமை கொண்டாடுவார்கள். அதிலும் என் வயது நண்பர்கள் முத்து வடுகநாதனோ , சுப்பையாவோ பார்த்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். கையில் இருப்பதில் அவர்களுக்கும் பங்கு கொடுத்து விடவேண்டும். அய்யரப்பா பார்த்தால் , அதட்டிப் பேச துணிவின்றி , நீ எல்லாம் படிச்ச புள்ளே இப்பிடிச் செய்யலாமா எனக் கேட்டுத் தடுத்து விடுவார், ஆனால் அந்த அய்யராத்துப் பாட்டி இருக்கங்களே.. அப்பா.. அவுங்க அவ்ளோ பேசுவாங்க. நாசமாப் போறவனே , கட்டைல போறவனே  என்று ஒரே திட்டு மழை தான். இப்போது அந்தப் பாட்டியும் இல்லை , அய்யரப்பாவும் இல்லை .அந்த மரமும் இல்லை. திருமண மண்டபம் கட்டுவதற்காக அந்த மரம் வெட்டப் பட்டு விட்டது.

இப்போது கோவிலுக்குப் போகும் போதெல்லாம் அந்த இடத்தைப் பார்க்கும் போது மனம் வலிக்கும். அந்த மரமே ஏதோ ஒரு தூணுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு ‘சங்கரா.. நான் இங்கே இருக்கேன் ‘ என்று அழைப்பது போல் ஓர் உள்ளுணர்வு தோன்றும். உடம்பே சிலிர்க்கும். இப்போ சொல்லுங்க.. அந்த மரத்திற்கு ஜீவன் இருந்திருக்குமா இல்லையா?

அந்த மரங்கள் மட்டுமல்ல .. குளத்தங்கரையில் இருந்த ஆலமரம் , , அடர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரங்கள், தாவிப் பிடித்த என்னை தடுமாறச் செய்து , கையை உடைத்து கட்டுப் போட வைத்த வேப்ப மரம் ,  இனிப்பும் , உரைப்பும் கலந்த ஒரு சுவையில் ‘முட்டாஸ் ‘ தந்த மஞ்சனத்தி மரங்கள் , ஊறிச் சுற்றி வெளியே இருந்த கரு வேல மரங்கள் எல்லாமே ..... ஜீவனோடு இருந்தவை. என் வாழ்வின் ஆரம்பக் காலங்களில் என்னோடு பின்னிப் பிணைந்தவை.

அம்மா , அப்பா , அண்ணன் , தம்பியைப் பிரிந்து கல்விகற்பதற்காக ஊரை விட்டுச் சென்றவன் நான். ஊரை மட்டுமா பிரிந்து சென்றேன்? இந்த உறவுகளையும் அல்லவா பிரிந்து சென்றேன். ஒரு முறை எனது பேராசிரியர் , மரியாதைக்குரிய மறைந்த திரு. கே.கிஷோர் அவர்கள் ( Prof.K.Kishore , Chairman , Inorganic & Physical chemistry Department , Indian Institute os Science , Bangalore)  இம்மை , மறுமை பற்றி விவாதிக்கும் போது தெளிவாகச் சொன்னார்கள். நமக்கு அழிவு என்பது இல்லை. இறந்த பின்னும் வாழ்வு உண்டு. ஆனால் அது நேரடியாக மனித வாழ்வு அல்ல. நாம் அழிந்த பின்னர் மறுபடியும் உயிர்ப்பிக்கப்டுவது ஒரு மரம் / செடி / கொடியாகத்தான். எரிக்கப்பட்டவர்கள் கார்பன் டை ஆக்சைடாக மாறி மரம் , செடி, கொடிகளால் கிரகிப்பட்டு உயிர்மாற்றம் பெறுகின்றனர்.  அதே போல மண்ணில் புதைக்கப்பட்டவர்கள் வேர்களின் வழியாக கொடியாக , செடியாக , மரமாக உயிர்ப்பிக்கின்றனர். மறுபடியும் சுழற்சி துவங்குகிறது. அந்த மூலக்கூறுகள் ஒரு நாள் மனிதனாகின்றன. ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு கருத்து தான்.

என்னுடைய பணி ஓய்வுக்காலத்தில் நிறைவேற்றப் பட வேண்டிய திட்டங்களில் ஒன்று மனித குலத்திற்கு  மறைமுகமாக பலனளிக்க வல்லது. அது என்னால் இயன்ற வரை மரங்கள் பயிரிட்டு வளர்க்கப் பட வேண்டும். அதிலே என் முன்னோர்கள் துவங்கி எதிர் கால சந்ததியினர் வரை வாசம் செய்ய வேண்டும். முடிந்தால் நீங்களும் முயற்சி செய்யுங்கள்.

 

அன்புடன் அமீரகத்தில் இருந்து சங்கரலிங்கம்.

படிச்சோம் ....... கிழிச்சோம் ..... பகுதி -4 ஸ்கூலுக்குப் போறேன்.. நானும் வாறேன்


படிச்சோம் ....... கிழிச்சோம் ..... பகுதி -4
ச்சூளுக்குப் போறேன் .நானும் வாரேன்....

சிறு வயதிலே பொம்ம திரி வெளையாண்டது  ஞாபகம் இருக்கா? யாராவது வீடு கட்ட ஆத்து மணல் லோடு இறக்கிப் போட்டிருந்தா போதும். நமக்கெல்லாம் அது ஒரு பெரிய பம்பர் பரிசு. ஊர் வாண்டுக எல்லாம் , நாமும் தான் , எல்லாம் அங்கே கூடிடுவோம். அரபியர்கள் , ஒரு பெரிய தாம்பாளத்தில் குமித்து வைத்திருக்கும் உணவை வட்டமாக அமர்ந்து அவரவருக்கு எதிரில் உள்ள உணவில் கை வைத்து உண்பது போல நம் வாண்டுகளும் அதை சுற்றி உக்காந்திருவாங்க.
அதுக்கு முன்னாடி , அரபியர்கள் உணவு உண்ணும் முறையை கொஞ்சம் விளக்கலாமேன்னு நம்ம ஊரு சலீம் பாய் கேக்குறாரு , அவருக்கு கொஞ்சம் விளக்கிட்டு அப்புறம் நம்ம மண்ணு திண்ண கதையைச் சொல்வோமா.

அரேபியர்கள் உணவு உண்ணும் முறையே அலாதி தான். முக்கியமா யாரையும் பாக்க வச்சுகிட்டு உண்ண மாட்டாங்க. அவுங்களையும் ஆட்டத்தில சேர்த்துக்குவாங்க. சாப்பாட்டுத் தட்டுக்கு முன்னாடி எல்லோருமே சமம்.வீட்டுப் பெரியவர்ல இருந்து , தோட்டத்துல வேலை பார்க்கிரவரு வரை எல்லோருமே ஒண்ணா உக்காந்து சாப்பிடுவாங்க. அதுவும் எப்பிடி? ஒரே தட்டுல.ஆச்சரியமா இருக்குல்ல. ஆனால் அது உண்மை. வேண்டிய அளவு மட்டும் சாப்பிடுவார்கள். பிரியாணி , கறி அல்லது மீன். கூடவே பச்சைச் செடிகள் , மற்றும் பேரீச்சம்பழம்.  கறியாக இருந்தாலும் , மீனாக இருந்தாலும் அதை நடுவில் வைத்து சுற்றி சாதம் / பிரியாணி வைத்திருப்பார்கள்... இதுவரை , நீ இந்தியன் , நீ இஸ்லாம் அல்லாதவன் என்று என்னை ஒருமுறை கூட ஒதுக்கியதில்லை. அவர்களோடு நானும் சாப்பிட்டிருக்கிறேன்.
 
படிச்சோம் கிழிச்சோமுக்கு வருவோம்..
காலையிலே எழுந்ததும் பால் பண்ணைக்குப் போகணும் . சோமு பெரியப்பா அளந்து ஊத்தும் பால்ல ஒரு 5௦௦ மில்லி வாங்கி வருவோம். அதுலயும் இளம் பசு பால் வேண்டாம்னு அம்மாவோட அட்வைஸ். ஏன்னு கேட்டா , நல்ல மூடுல இருந்தா , அதுல காபி போட்டா கெட்டியா இருக்கும்னு பதிலும் , ஏதோ ஒரு எரிச்சல்ல இருந்தா , தொரைக்கு விளக்கம் சொல்லணுமோ , போயி வாங்கிட்டு வான்னா வாங்கிட்டு வர வேண்டியது தானே ன்னு ஒரே அதட்டலாவும் இருக்கும். பால் வாங்கிட்டு வந்ததும் கேத்தல்ல, சிக்கரி கலந்த ராம தூதன் காபித் தூள் அண்ட் வெல்லக்கட்டி  போட்டுவச்ச  காப்பில பால கலந்து ஒரு பெரிய தம்ளர்ல விளிம்பு வரைக்கும் ஊத்தி வாங்கிட்டு வருவோம். காப்பிய அமுக்கி அமுக்கி ஊத்த முடியாது. இல்லாட்டி நல்ல அமுக்கி எப்படியும் ஒரு ரெண்டு டம்ளருக்கு இல்லாட்டாலும் , ஒன்னரை டம்ளராவது தேத்தி இருக்கலாம்.

காபி குடிக்கிறவரைக்கும் தான் வீட்டுல. அது முடிஞ்சிச்சா , அத்து விட்டுச்சாம் கழுதை எடுத்து விட்டுச்சாம் ஓட்டம்னு  வயற்காடு அல்லது உப்பாற்றுக் கரையோரம். சுமார் 7:30 க்கு ஊரணிக் கரை. கோலிக்குண்டு வெளையாட்டு . இல்லாட்டி இடைக்காட்டூர் டென்ட் கொட்டாயில பார்த்த எம்ஜிஆர் சினிமாவை பத்தின ஒரு அலசல்.அப்புறம் சட்டை டவுசர் எல்லாம் அவுத்து கரையில போட்டுட்டு ஊருணிக்குள்ள ஒரே கும்மாளம் தான். வாடா மச்சான் வாடா ன்னு தண்ணிக்குள்ள பாட்டு வேற. காலேஜ் படிக்கிற அண்ணன்லாம் பிரஷ்ல பேஸ்ட் வச்சு பல்லுத் தேய்ப்பாங்க. மத்தவங்க எல்லாம் சாம்பல் , இல்லாட்டி செங்கல் போடி தான். சோப்பு?? அது இல்லாமலா? என் அழகுமேனியின் ரகசியம் லக்ஸ் சோப்புன்னு எதாவது ஒரு பிரபலமான நடிகை குமுதம் / ஆனந்த விகடன்ல சொல்லியிருப்பாங்க. நமக்கும் கொஞ்சம் அழகு வந்துடாதான்னு ஒரு நப்பாசைல அதையும் வாங்கிட்டு வந்து கரைக்கிறது தான்.

(அழகு வந்துச்சா , வந்துச்சான்னு சோதிக்க வேண்டாம் மோளே. இருக்குன்ன அழகு அங்கன தன்னே உண்டு.கூடிட்டும் இல்லா . கொரைஞ்சிட்டும் இல்லா)

குளிக்கும் போது அடிக்கும் லூட்டி இருக்கே ... யப்பா தாங்காது. ஒண்ணா ரெண்டா ?   நம்ம போடுற ஆட்டத்தைப் பார்த்திட்டு கரையல போர பெரிசு கோபத்துல கரையில் உள்ள  நம்ம டிரெஸ்ஸை எல்லாம் எடுத்து மடப்பள்ளியின் மீது போட்டுவிடும். அது அதன் அதிகாரத்தை காட்டுதாம். நம்ம செட்டுலே உயரமா , மரம் ஏறத் தெரிஞ்சா ஒருத்தனைக் கெஞ்சிக் கூத்தாடி , பள்ளிக்கொடத்துல ஒன்னுக்குத்தண்ணி  விடய்ல கல்கோனா வாங்கித்தர்றேன்னு பிராமிஸ் பண்ணி எப்பிடியோ அவனை மடப்பள்ளியின் மீது ஏற்றி விட்டு டிரெஸ்ஸை வாங்கிப் போட்டுக்கிட்டு , பிள்ளையாருக்கு  ஒரு கும்பிடு போடுவோம். ,அப்புறம் சிவன் கோவில ஒரு சுத்து  வளம் வருவோம்.  வழில இருக்கிற கணபதி நாட்டியமாடிக்கிட்டு இருக்குற பிள்ளையாரைப் சிலையைப் பார்த்து  ‘ இது நடன கணபதி ‘ ‘இல்லேடா நர்த்தன கணபதி ‘ ன்னு ஒரு விவாதம் , அப்புறம் சன்டிகேசவரருக்கு முன்னாடி நின்று ‘டேய் இந்தச் சாமிக்கு காது கேக்காதாம்டா  ‘ ன்னு சொல்லி கைத்தட்டி சாமியக் கும்பிட்டு நவக்கிரகங்களை ஒரு சுத்து சுத்தி நேர வீட்டுக்குத்தான்.

  

வீட்டுல அம்மா தோசை கல்லைப் போட்டு தோசை சுட ஆரம்பிப்பாங்க, மூணு வெள்ளத் தோசை , மூணு கேப்பத் தோசை., தொட்டுக் கொள்ள மிளகாய் சட்னி ... முடிந்தது காலை உணவு.

கொடியில கெடக்குற முந்தாநேத்து கழட்டிபோட்ட டவுசரு , சட்டைய போட்டுகிட்டு நம்ம ஸ்டோர் ரூம், அதாங்க எதாவது சன்னல் திண்டு , அங்கே தானே புத்தகமெல்லாம் அடுக்கி வச்சிருப்போம் , அதுல அன்னைக்கு வேண்டிய நோட்டு , புஸ்தகம் எடுத்துக்கிட்டு , ஹவாய் செருப்ப  போட்டாச்சுன்னா , பட்டயக் கெளப்ப போறேன்னு இல்லே ..இல்லே  . ஸ்கூலுக்கு கெளம்பிட்டேன்னு அர்த்தம். அம்மா போயிட்டு வர்ரேன் .. அம்மா போயிட்டு வர்ரேன் ன்னு சொல்லிட்டு நடராஜா பஸ் சர்வீசுல பயணப்பட வேண்டியது தான். வழி நெடுக டேய் மனோகரா வாடா , ஞானம் வாடா , டேய் முருகேசா வாடா ,  ஜெகன்னாதா வாடா ன்னு கூப்பிட்டுகிட்டே போக நம்ம சேனையும் பெருகிவிடும். முதல் மண்டகப்படி , சக்கரைப்புளி மரத்துக்கிட்ட.

அப்புறம் பள்ளிக்கூடத்துக்கு அருகிலே உள்ள கோயில் மண்டபத்தில , தோப்புல . தோப்பு இல்லாட்டி வேலிக்கருவைக் காட்டுக்குள்ளே. கொஞ்சம் இளைப்பாறல். முதல் மணி அடிக்க வகுப்பறையில் தரையில் அமர்வோம். இரண்டாம் மணி அடிக்கும் வரை சல ... புல... சல புல. பிரேயர். அப்புறம் வழக்கம் போல அன்னைக்கில இருந்து இன்னைக்கு வரைக்கும் என்ன நடத்திகிட்டு இருக்காங்களோ அதே பாடங்கள். . தமிழ் னா , முயல் ஆமைக் கதை , காண மயிலாடக் கண்டிருந்த வான் கோழி... கற்றதனாலாய பயனென்கொல்....  ஆங்கிலத்துல , மிடாஸ் டச் , பெலன்குயின் பேரர்ஸ் , கீதாஞ்சலி , அப்புறம் வரலாறுல அகபர் தீன் இலாஹி மதத்தை தோற்றுவித்தார் , அசோகர் குளத்தை வெட்டினார் ... .எப்படா ஒன்னுக்குத் தண்ணி விடுவாங்கன்னு ஒரே ஆவலா இருக்கும்.

மணி அடிச்சதும் வெளிய ஓடிப்போயி திறந்த வெளியில் ஈரமாக்கிவிட்டு, ஐஸ் வண்டிக்கரரிடம்  அஞ்சு பைசாவுக்கு ஐஸ். மற்றும் பொட்டி கூட இல்லாத பாட்டியின் பொட்டிக்கடைல மூணு பைசாவுக்கு கல்கோனா. 

“ டேய் சங்கரு......  எனக்குடா “

“சத்தியமா காசு இல்லேடா “

“சரி... ஒண்ணு வாங்கு .. காக்கா கடி கடிச்சுவோம்.

மதிய இடைவேளை என்பது ஒருமணி நேரம்.உள்ளூர் மாணவர்கள் அவரவர் வீட்டுக்குச் செல்ல வெளியூர் மாணவர்கள் பள்ளியிலே உணவை முடித்து விட்டு பள்ளியின் வாசலிலும் , கோவில் மண்டபத்திலும் மற்றும் மரங்களின் நிழலிலும் இளைப்பாறுவர். இடையில் ஐஸ் வண்டிக்காரரிடம் அக்கௌன்ட் வைத்து ஐஸ் சாப்பிடுவார்கள்.பாட்டி கடையில் கடலை மிட்டாய் , கொக்கோ மிட்டாய் ,முறுக்கு. இது தவிர சீசனுக்கு ஏற்றார் போல, கொடுக்காபுளி , மாதுளம் பழம் , பனங்கிழங்கு , அவித்த கடலை etc. ..பாட்டி கடையின் வியாபார நேரமும் பகல் ஒரு மணிக்கு தான் மற்றும் அந்த ஒரு மணி நேரம் தான். அந்த இளம் வயதில் ‘ பாட்டி அநியாயமாய்க் கொள்ளை அடிக்குதுடா ‘ என்று எத்தனை வாட்டி கமென்ட் அடித்திருப்போம். அதனை இப்போது நினைத்தால் மனது வலிக்கிறது. பாட்டி செய்தது  வியாபாரம் மட்டும் அல்ல. ஒரு சேவை. அதனைக்காட்டிலும் தன்மானமிக்க உழைப்பு. இன்னும் சொல்லப் போனால் அவருக்கு அதுவே அந்த தள்ளாத வயதிலும் தள்ளி விட முடியாத பிழைப்பு. அவருக்கு என் பணிவான வணக்கமும் நன்றிகளும்.

பள்ளிப் பருவம் ... இன்று நினைத்தாலும் விழிகளில் வெள்ளம். எத்தனை நிகழ்வுகள். சண்டை , சமாதானம் , கேலிப் பெயர்கள் , கிண்டல்கள், ஆசிரியரிடம் குறும்புகள் ,  மாணவிகளிடம் பேசும்போது வரும் மின் அதிர்வு., ஏப்ரல் முதல் தேதியில் இங்க் தெளிப்பது , AF என்று ரப்பரில் ஸ்டாம்ப் செய்து அடிப்பது   .. எழுதலாம் ..எழுதலாம் . இன்னும் எவ்வளவோ எழுதலாம். கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விடுவோம்.

இவையெல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு இல்லையே  என்று ஒரு ஏக்கம் நம் மனதில் . இந்த ஏக்கம்  ஏதோ எம் தலை முறைக்கு மட்டும் என்றில்லை. வீசம் , முக்காலே மூணு வீசம், முந்திரி , மாகாணி  என்று  குருகுலத்தில் படித்த தாத்தாக்களும் ,  வெள்ளி முளைக்கப பள்ளிக்குச் செல்வோம்’ என்று டவுசர் , சட்டை போட்டுச் சென்ற அப்பாமார்களும் ஏங்கிய ஏக்கம் தான். . நாம் கிட்டி, கோலி , பம்பரம் என வரிசைப்படுத்தினால் , நமக்கு அடுத்த தலைமுறை கிரிக்கெட்டில் தொடங்கி , சூப்பர் மரியோ , ஜெயந்த் வில் , ரோல்லர் கோஸ்டர் என்பார்கள். அதற்கு அடுத்த தலைமுறை ,செல்லிடப் பேசியிலே விளையாட்டு. ஒவ்வொரு தலை முறையுமே சொல்லும் 'நாங்க அனுபவிச்சத நீங்க அனுபவிக்கலே" எங்கள் தலைமுறை அனுபவமே வேறு.  நாளை எம் பிள்ளைகளும் இதையே தான் சொல்லுவாரோ